சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தை பற்றியதே இந்த வலைப்பதிவு. அப்புத்தகத்தின் கதையும், கதை சொல்லப்பட்ட விதமும், அக்கதையில் கையாண்ட உத்திகளும், கதை மாந்தர்களும், கதை முடிவும் என்னை கொள்ளை கொண்டன என்றால் அது மிகை அல்ல, அதன் வெளிப்பாடே இந்த வலைப்பதிவு.
நான் இவ்வளவு சிலோகத்து பேசப் போகும் அப்புத்தகம் அமரர் கல்கி அவர்களால் எழுதப்பட்ட புகழ்ப்பெற்ற் தமிழ் வரலாற்றுப் புதினமாகும். 1950 - 55 வரை கல்கி அவர்களால் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது.
இக்கதை சோழச் சக்கரவர்த்தி அருள்மொழி வர்மன் அவர்களை பற்றியது. இவர்தான் பின்னாளில் இராஜ இராஜ சோழன் என்று அழைக்கப்பட்டவர். இவரது இளமை பருவம், நற்பண்புகள், குடும்ப நிகழ்வுகள் மேலும் அக்காலத்தில் நடைப்பெற்ற பல்வேறு நிகழ்வுகளை கற்பனைக் கலந்து தனக்கேயுரிய பாணியில் விவரித்திருப்பார் கல்கி.
இக்கதையை பற்றி மேலும் நான் விவரிக்க விரும்பவில்லை. இதனை படிக்கையில் எனக்கு ஏற்பட்ட அதே உற்சாகமும் களிப்பும் தங்களுக்கு கிடைப்பதை நான் தடை செய்ய விரும்பாததனால் உங்களிடமே விட்டு விடுகிறேன்.
எனினும், இக்கதையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய என்னை கவர்ந்த கதாபாத்திரங்களைப் ப்ற்றிய சிறு தொகுப்பு:
- வல்லவரையன் வந்தியத்தேவன்:
- இக்கதையின் உண்மையான கதாநாயகன். அருள்மொழி வர்மனின் உற்ற தோழன். இவருடைய குணாதிசயங்களையும், வீரப்பிரதாபங்களையும், காதல் வாழ்க்கையையும் மிக அருமையாக விவரித்திருப்பார் ஆசிரியர்
- குந்தவை:
- சோழ சாம்ராஜ்ஜியத்தின் இளவரசி. அருள்மொழி வர்மனின் தமக்கை. இராஜங்க விஷயங்களில் கூட அறிவுரை கூறும் அளவுக்கு அறிவு கூர்மை உடையவளாகவும் இப்பாத்திரம் படைக்கப்பட்டிருக்கும்.
- அருள்மொழி வர்மன்:
- இவர் தான் இக்கதையின் நாயகன். சோழ சாம்ராஜ்ஜியத்தின் இணையில்லா அரசராக, "இராஜ இராஜ சோழர்" என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர்.
- நந்தினி:
- இக்கதையின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று. காண்பவர் அனைவரையும் தன் அழகினால் மோக வலையில் விழ வைக்ககூடியவள்.இவரின் நடவடிக்கைகளும், சதி செயல்களும் கதையின் போக்கை தீர்மானிக்கும் வகையில் இருக்கும்.
மேலும் சில கதாபாத்திரங்களின் பெயர்கள்:
- வானதி
- பூங்குழலி
- சேந்தன அமுதன்
- மந்தாகினி
- ஆழ்வார்க்கடியான் நம்பி
- அனிருத்த பிரம்மராயர்
- ஆதித்த கரிகாலன்
- பெரிய பழுவேட்டரையர்
- செம்பியன் மாதேவி
இனிவரும் பகுதி இக்கதையை படித்தவர்களுக்கு மட்டும், மற்றவர்கள் கடைசி பத்திக்கு செல்லவும்.
இக்கதையின் முடிவுக்கு பிறகு எனக்கு ஏற்பட்ட சில ஐயங்களை கேள்விகளாக்கி இருக்கிறேன். அவை கீழே,
- நந்தினி உண்மையில் யாருடைய மகள்?
- ஒரு சமயத்தில் கருத்திருமன் ஆழ்வார்க்கடியானிடம் நந்தினி தன்னுடைய மகள் என்று கூறுகிறான், அது எப்படி?
- நந்தினி உண்மையில் வீரபாண்டியனின் மகள் என்றால் மந்தாகினியின் கதாபாத்திரத்தின் தன்மையே அங்கே கேள்விக்குறி ஆக்கப்படுகிறதே, ஏன் இந்த முரண்பாடு?
- கடைசியில் கருத்திருமன் என்ன ஆனான்?
- மந்தாகினி அருள்மொழி வர்மனிடம் மட்டும் அவ்வளவு பாசம் கொள்வதற்கான் காரணம் என்ன?
இக்கதையை இணையத்தில் படிக்கஇங்கே கிளிக் செய்யவும்.
இதன் ஒலிப்பதிவைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும்.
இக்கதையை பற்றிய இந்த வலைப்பதிவு காலம் கடந்ததாக இருக்கலாம். இருப்பினும் இப்படைப்பே காலத்தை வென்றதாயிற்றே!!!
தங்களின் கருத்துக்களும், என் கேள்விக்கான பதில்களும் வரவேற்க படுகின்றன. :)
1 comment:
மிகவும் அருமையான புதினம் , அதே பாணியில் அருமையாக உங்களால் விளக்கப்படிருக்கிறது !!!
படிக்க படிக்க அடிமையாக்கும் புதினம் !!
இதை படிக்க துடிக்கும் மனம்,
தினம் தினம் !!!
Post a Comment